விடுதலைப்பேரொளி

திருமதி அடேல் பாலசிங்கம் பார்வையில் பிரபாகரன்

Posted on

Adele Balasingham

தமிழில்

PDF  Prabakaran in my view tamil-adle balasingam

****

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்

எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.
https://velupillaiprabhakaran.files.wordpress.com/2013/03/balafamily.jpg

அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம்,
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.

மேலும்

*************

ஆங்கிலத்தில்

PDF
Prabakaran in my view-adle balasingam

பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது

Posted on

கீர்த்தி அந்த மனிதனிலும் பெரிதாய் அமைந்திருந்தது. அது 80களின் ஆரம்பத்தில், நான் முதன்முதலாக விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த போது அப்படி இருந்தது.

அந்த முதல் சந்திப்பை மிக உயிர்ப்புடன் நினைவு வைத்துள்ளேன். அது கடும் வெயிலடித்த ஒரு பகல் பொழுதில் சென்னையில் உள்ள ஒரு புலிகளின் இடத்தில் இடம் பெற்றது. அவ்வீடு வங்காளவிரிகுடாவைப் பார்த்தபடியே இருந்தது. பிரபாகரன் ஒரு பத்திரிகையாளரை முதல் தடவையாக தன் வாழ்நாளில் எதிர்கொள்ளப் போகின்றார். அது எனக்கு ஒரு மிகப்பெரிய விடயம். ஆனால் நான் அந்த அபூர்வமான கெரில்லாத் தலைவரை சந்திப்பதற்கு முன் இரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் அந்த அறையில் உட்கார்ந்திருந்தபோது புலிகள் இயக்கப்போராளி ஒருவர் ஒரு வர்ணத்தொலைக்காட்சியை இயங்க வைத்தார்.

அவை நன்றாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடாவாகும். ஒளி பிரயோகிக்கப்பட்ட விதமும், கமெராவின் கோணங்களும் பிரபாகரனை நிஜத்திலும் பெரியதாகக் காட்டியது. அவர் பலமானவராக, கடுமையானவராக, வீரம்செறிந்தவராகக் காணப்பட்டார். அந்த ஒளியிழைநாடா, புலிகளை ஒரு பெருமை மிக்க தேசத்தின் ஒழுக்கமான இராணுவமாகக் காட்டியது. அங்கு பிரபாகரன் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். சீருடையில் உள்ளார். புலிக்கொடியை ஏற்ற அவர் அணிவகுத்து நின்ற புலிப்படையினரைத்தாண்டிச் சென்றார். தேசபக்திப்பாடல் பின்னணியில் ஒலிக்க, பிரகாசமான கண்களுடன் – பெருமையுடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை சூரியப்பிரகாசம் நிரம்பிய வெளியில் பிரபாகரன் பறக்க விடுகின்றார்.

 

அங்கு பிரபாகரன் கொள்கை கொண்ட பிரமாண்டமான மனிதர் – புரட்சியாளர், கவர்ச்சிகர மானவர். ஆனால் முதல்தடவையாக பிரபாகரனைச் சந்தித்தபோது பேச்சிழந்து போனதுடன் அதிருப்தியுற்றேன். அவர் அந்த அறைக்குள் நடந்து வந்தார். நான் அடையாளம் காணவில்லை. வீடியோவில் கண்ட ஆறடி உயரமுள்ள நேர்த்தியானவரால், பாதிக்கப்பட்டதால் அடையாளம் காணவில்லை. அங்கு வந்த மனிதன் கட்டையான, சிறு தமிழ் வணிகர் போன்ற உருவ முள்ளவர். நான் அவரை புலி ஆதரவாளர் என்று நினைத்தேன். ஒரு ஆர்வமுள்ள தலையாட்டலும் செய்தேன். சில நிமிடங்களின் பின்னர் ஒரு மென்மையான குரல் தமிழில் ஒலித்தது. ‘நான் தான் பிரபாகரன்’ என்றார். அவர் அடையாளம் கண்டுவிட்டார். நான் அடையாளம் காணவில்லை.

அந்த மனிதர் மன்னிப்பு கேட்பவர் போன்று சிரித்தார். நான் அந்த முகத்தை ஆராய்ந்தேன். எனது பேர திர்ச்சிக்கு பின் அது பிரபாகரன் தான் என்பதை உணர்ந் தேன். கமெராக்கள் பொய்சொல்லாதென யார் சொன்னார்கள். பிரபாகரன் கருஞ்சாம்பல் நிறக்காற்சட்டையும், வான நீலநிறமுள்ள சேர்ட்டும் அணிந்திருந்தார். அவர் வீதியால் நடந்து சென்றால் யாரும் அவரை இரண்டாம் தடவை திரும்பிப் பார்க்கமாட்டார்கள். வீடியோவில் பார்த்த உறுதிமிக்க, சீருடை தரித்த, கொரில்லாத் தலைவருக்கும், இந்த மென்மையான தோற்றமளிக்கும் சிவிலியனுக்குமிடையோன ஒப்பீடு ஒரு தற்செயல் நிகழ்வே. நான் ஏன் வீடியோவில் பிரபாகரன் பேசவில்லை என்பதை உணர்ந்தேன்.

பெருமனிதனிடம் மென்மையான குரல். அது ஒரு நாயகனின் தோற்றத்தைப் பாதிக்கும். நான் என் நம்பாத தன்மையை மறைக்க முயன்றேன். ஆனால் அதிர்ஸ்டவசமாக அது பிரபாகரனை சிறிது அதிசயப்பட மட்டும் வைத்தது. எனது குழப்பத்தை மறைப்பதற்கு சிறந்தவழி எனது கேள்விகளை ஆரம்பிப்பது. அது இருமணிநேரம் நீடித்தது. முடிவில் என் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மனிதனைச் சந்தித்ததை உணர்ந்தேன். இன்று பல குறிப்பிடத்தக்க மனிதர்களைச் சந்தித்த பின்பும் பிரபாகரனே மிகக் குறிப்பிடத்தக்கவராவார்.பிரபாகரன், நான் சந்தித்தவர்களில் மிக உறுதிகொண்டவர். அவரது தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது. அவர் இன்று பார்ப்பதை அவரது எதிரிகள் நீண்டகாலங்களின் பின்னர் தான் உணர்வார்கள்.

ஊடகவியலாளர்,

தெற்காசியத் தலைமைச் செய்தியாளர்,

ரைம்ஸ்,

சி.என்.என். இந்தியா.

அனிதா பிரதாப்

ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்

Posted on

ஈழமண்ணின் வரலாறு ஒரு கறைபடிந்த காவியமாகத்தான் இதுவரை வரையப்பட்டிருக்கிறது. தமக்கே உரித்தான தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமக்கென ஒர் அரசை அமைத்து, தமக்கே உரிய மொழி, மத, கலை, கலாச்சார பாரம்பரிய விழுமியங்களைப் பேணிப்பாதுகாத்து, பூரண இறைமையுடன் ஈழத்து தமிழ் மக்கள் 15ம் நூற்றாண்டின் இறுதிவரை அந்த மண்ணிலே மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்வாழ்ந்து வந்தார்கள் என்பதை முழு உலகமும் அறியும்.

16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை மண்ணில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களும், தொடர்ந்து டெச்சுக்காரர்களும் இறுதியாகஆங்கிலேயர்களும் தொடர்ச்சியாக 400 வருடங்களுக்கு மேலாக தமிழர்களை தம் அடிமை வலைக்குள் சிக்கவைத்து தமிழ் மக்களின் வாழ்வையும், அவர்கள் இறைமையையும் சீர்குலைத்தார்கள் என்பதையும் முழு உலகமும் அறியாமல் இருக்கமுடியாது. அந்நியர்களான போர்த்துக்கீசரும், டச்சுக்காரர்களும் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த போதிலும், தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கையும், கிழக்கையும் தனி நிர்வாக அலகாகக்கொண்டே ஆட்சி செய்தனர்.

ஆனால் 1796ல் டெச்சுக்காரர்களிடம் இருந்து இலங்கை முழுவதையும் தமதாக்கிக்கொண்ட ஆங்கிலேயர், தமது நிர்வாக வசதிக்காக இலங்கைமுழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து, தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கை இலங்கை வரைபடத்தில் இருந்து நீக்கிய பாதகமான, துரோகத்தனமான செயல். அந்த மண்ணின் கண்ணீர் சிந்தும் வரலாற்று நிகழ்வுகளில் மிகக் கொடூரமானது. மேலும், ஆங்கிலேயர்கள் 1948ம் ஆண்டு இலங்கையை விட்டு நீங்கும்போது ஜனநாயகம் என்ற போர்வையில் இலங்கை முழுவதையும், பெரும்பான்மைமக்களாகிய சிங்களவர் கையில் தாரைவார்த்துவிட்டுத் தப்பித்துக்கொண்ட,ஜனநாயக முறைகேடான நிகழ்வும் அங்குதான் நிகழ்ந்திருக்கிறது.

ஜனநாயக கோட்பாட்டை பேரினவாதக் கோட்பாடாகக் கருதிக்கொண்ட அல்லது மாற்றிக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் செய்த அனர்த்தங்கள் எண்ணற்றவை. இலங்கையிலும், ஈழமண்ணிலும் சிந்திய தமிழர்களின் இரத்தங்களும், சொத்துக்களின் அழிவுகளும், மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும் சோதனைகளும், வேதனைகளும், இழப்புக்களும் எண்ணில் அடங்கா. பொறுத்து,பொறுத்து ஈற்றில் பொங்கி எழுந்த தமிழ்க் குலம், குறிப்பாக இளைஞர்குழாம் தமது இழந்த உரிமைகளை மீளப்பெற்று சுதந்திரமாக வாழச் சித்தம் கொண்டனர்.

தமிழர்கள் இழந்த உரிமைகளை மீள வழங்குவதில் சிங்கள அரசும், மாறிமாறி ஆட்சிக்குவந்த சிங்களத் தலைமைகளும் புரிந்த அரசியல் சாகசங்கள், வித்தைகள், நடவடிக்கைகள் பலப்பல. சமரச முயற்சிகளினால் எழுதப்பட்ட பல உடன்படிக்கைகள் எத்தனைதடவைகள் கிழித்தெறியப்பட்டு காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. இவ்வாறான அவலங்களுக்கு முழுக்க, முழுக்க சிங்களத் தலைவர்கள் மட்டும்தான் பொறுப்பாளிகள் என்று கூறுவது ஒரு பக்கச்சார்பானது.

குறிப்பாக 1930 களில் இருந்து, ஈழத்தமிழர்களின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக தெரிந்தோ, தெரியாமலோவிட்ட தவறுகளும், கைக்கொண்டதவறான அரசியல் கோட்பாடுகளும், காலத்துக்கு ஒவ்வாத அரசியல் கொள்கைகளும், பல சந்தர்ப்பங்களில் மாற்றான் கைக்கு விலைபோன நிகழ்வுகளும் பலவகைகளில் ஈழத்தமிழர்களின் இன்றைய இந்த அவலநிலைக்கு ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை நியாயவாதிகள் ஒப்புக்கொள்ளாமல் விடமாட்டார்கள். ஆனால் 1983 யூலையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர் நடாத்திய இனப்படுகொலையின் பின்னர் ஈழத்தின் அரசியல் நிலைமையிலும், தலைமையிலும் ஏற்பட்டமாற்றம்,தமிழர்களின் இந்தப் புரையோடிப்போன துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் ஒரு நிலையான பரிகாரம் கிடைக்கும் என்று தமிழ்த்தேசமும், நன்நோக்குள்ள பிறதேசங்களும் உறுதியாக நம்பிக்கொண்டு இருக்கின்றன.

தமிழர்களுக்குக் கிடைத்த தலைமையாக ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’என்ற அரசியல் அமைப்பும், அதன் ஒப்பற்ற தேசியத் தலைவரே பிரபாகரன் என்பதும் தமிழ் மக்களும் உலகமும் ஒப்புக்கொண்ட ஓர் உண்மையாகும். பேரினவாத சக்திகளுக்கு, பதிலடி கொடுக்கக்கூடிய அரசியல் இராணுவ மாற்றுவழிகளையும், கொள்கைகளையும் மிகவும் திறமையாகவும், சாதுரியமாகவும் தீட்டி, அரசியல் சாணக்கியர்களையும், தன் தளபதிகளையும், போராளிகளையும், உரிய முறையில் வழிநடாத்தி, தமிழ்மக்கள் எல்லோரையும் ஒன்றுதிரட்டி உறுதியுடனும், தூரநோக்குடனும், நாட்டுப்பற்றுடனும், நேர்மையாகவும், உண்மையாகவும் அரசியல் விடிவை நோக்கி விரைந்துசெல்லும் ஓர் ஒப்பற்ற தலைவனாக தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தமிழ் மக்களுக்கு கிடைத்தமை காலம் ஈந்த ஒரு பெரும் பேறாகும்.

கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக, தளராமலும்,உறுதியுடனும், யாருக்கும் விலைபோகாமலும், நேர்மையாகவும், இதயசுத்தியுடன் கொண்ட கொள்கைக்காக, தமிழ்மக்களின் நிரந்தர விடிவுக்காய் தன் உயிரையும் துச்சமாக மதித்து, களத்தில் நின்று போரை வழிநடத்துகின்ற, போராடுகின்ற ஒரு வீரத் தமிழ் மகனை, ஓர் ஒப்பற்ற தேசியத் தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது அவர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். தளபதிகளோடு தளபதிகளாய், கரும்புலிகளோடு கரும்புலிகளாய், போராளிகளோடு போராளிகளாய்,அரசியல் அறிஞர்களோடு சமமாய், தாமும் தலைவனாக மட்டும் இல்லாமல், அநாதரவற்றவர்களுக்கெல்லாம் தாயாய், தந்தையாய், ஊனமுற்றவர்களுக்கெல்லாம் ஊன்றுகோலாய் திகழும் ஓர் ஒப்புயர்வற்ற தலைவனை தமிழ் மக்கள் பெற்றிருப்பது ஈழமண்ணின் வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும் என்று துணிந்து மகிழ்ச்சியோடு கூறக் கூடியதாய் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.

நீதி, நியாயம், தர்மம், என்பன உண்மையானால் இவ்வாசகங்கள் ஈழவரலாற்றின் இறுதி அத்தியாயத்தில் நிரந்தரமாக பதிவு செய்யப்படவேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை. அவ்வாறான ஒர் ஒப்பற்ற தலைவனின் 50வது பிறந்த தினம் 26.110. 2004 அன்று தமிழர்கள் பட்டி, தொட்டிகளிலெல்லாம் கொண்டாடப்படும் இவ்வேளையில், ஈழத்தமிழர் பூரண சுதந்திரம் கொண்ட மக்களாக அந்த மண்ணில் வாழ தலைவனே! நீ வழிசமைக்க வேண்டும் என்று நல்லாசி கூறுவதோடு நீங்கள் நீண்டகாலம் நலமாக வாழவேண்டும் என்று எம் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை மனநிறைவோடு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

வரலாற்றாய்வாளர்,

விரிவுரையாளர், சார்ள்ஸ் ஸ்ரூபேட் பல்கலைக்கழகம்.

அவுஸ்திரேலியா.

கலாநிதி முருகர் குணசிங்கம்

ஓங்கியெரியட்டும் அந்த விடுதலைச் சுடர்

Posted on

கால இடவெளிகளுக்குள் கட்டற்றுப் பிரவகிக்கும் ஆகுதல்களாக வரலாற்றுப் பேராறு ஓடிக்கொண்டேயிருக்கிறது.

துளித்துளியாய் உருவெடுக்கும் சம்பவங்கள் பேரலைகளாகவும் பரிணமித்துப் பாரினை அதிசயிக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப்போராட்டம் இன்று கொண்டிருப்பது பேரலைப்பரிமாணம். புயலை எதிர்க்க ஆழத்திருந்து எழுந்த போர்க்கோலம். அடக்கு முறையை எதிர்க்கும் அரசியலாய் சொல் மழை பொழிந்த அரசியலார் காலத்தைக் கழித்த காலத்தில் மின்னல் தோன்றியது நம்வானத்தில். இன்று கேட்பதோ முழக்கம். உள்ளூரப் புகுந்து எதிரிகளின் உறக்கத்தை நிரந்தரமாய்க் கலைக்கும் முழக்கம். இம்மின்னல் ஒளி தோன்றிப் பின் ஒலி தோன்றும் இடைவெளிக்குள் தோற்றமுற்றான் ஒருவன். ஒரு தலைவன்.

இவன் உலகத் தமிழர்களின் இறைமைக்கும் தற்பெருமைக்குமான குறியீடு. இன்று நடைபெற்றுக்கொண்டிக்கும் ஈழத்தமிழர்களின் மகாபுரட்சி சென்றடையவேண்டிய இலக்கையும் அதன் திசையையும் தீர்மானிக்கும் தீர்க்கமான வல்லமை கொண்ட இவனை யாரும் வாங்கமுடியாது. இவனுக்கு விலையில்லை. தனக்கு இவன் தானிட்ட கட்டளையே தன் மக்களுக்கு இவன் கொடுத்த வாக்குறுதி. அடையவேண்டியதை அடைவதற்குக் கொடுக்கவேண்டிய விலையைக் கொடுக்கத் தயங்காதவர்களில் இவன் ஒருவன்.

மனிதர்களின் தீர்ப்புகள் எவையாயிருந்தாலென்ன. அவர்கள் வெறும் மனிதர்கள்தானே. தீர்ப்பளிக்கும் உரிமை வரலாற்றுக்குமட்டுமே உண்டு. மனிதர்களுக்குக் கடமைகளேயுண்டு. இயற்கையிடம் பாடம் கேட்டு, வரலாற்றினால் வழிகாட்டப்பட்டவர்களுக்குத் தோல்வி எப்போதும் வந்ததில்லை. அவ்வப்போது புரட்சியின் தொல்நகரான பாரிஸின் சில வீதிகளில்நடக்கும் போது இந்நகரின் ஆத்மா அறைகூவி அழைக்கிறது. அடக்கு முறைக்கெதிராக அணிதிரண்ட மக்களைத் திறம்பட வழிநடத்திய தலைவர்கள் பிறந்த தேசம் இது. மாறா(marat), டோன்தோ(ன்)(danton), காமி தெமூள(ன்) (camille desmoulins), ச(ன்) யுயிஸ்த் (sant just), றொபெஸ்பியர் (robespierre)மக்களுக்காய் மட்டுமே சுவாசித்த இந்த மகான்களின் சுவாசப்பைகளினால்தான் சுத்திகரிக்கப்பட்டது இத்தேசத்தின் நாடிகளில் இன்றும் ஓடும் உதிரம்.

றொபெஸ்பியர். விடுதலையும், மக்களுக்கான ஒரு குடியரசும் என்பதற்காகத்தான் இவன் வாழ்ந்தான். மடிந்தான். இவன் மக்களுக்கான விடுதலையை மட்டுமே சுவாசித்தான். மக்களின் விடுதலைக்காக அறிவியல் ரீதியில் ரூசோ சிந்தித்ததை செயலுருவில் வடிவமைத்த இவன், சுதந்திரப் பிரெஞ்சு தேசத்தின் காரணகர்த்தா.காரணம் இவனை யாரும் விலைக்கு வாங்க முடியவில்லை. இவனை யாரும் கறைபடுத்த முடியவில்லை. தனது கொள்கையில் ஒருதுளியையேனும் இவன் விற்கவில்லை. இவனது உறுதிப்பாடுகளின் ஒரு இம்மியையேனும் யாரும் அசைக்க இவன் அனுமதிக்கவில்லை. வரலாறு உள்ள வரைக்கும் இவனுக்கு ‘மாசற்றோன்’ எனும் நாமமே இருக்கும். பிரஞ்சுத் தேச வரலாற்றில் இவனுக்குப் பின் வேறு யாருக்கும் இந்நாமம் சூட்டப்படவில்லை.

விடுதலை பற்றியும் அதற்குக் கொடுக்க வேண்டிய விலைபற்றியும் தரவுகளைத் தருபவை இந்நாட்டின் வரலாற்றேடுகள். சமாதானப் போர்வையில், பேசுவோம் எனும் தோரணையில் காலத்தை இழுத்துப் போராட்டத்தைச் சிதைப்பதற்கு பேரினவாதச் சக்திகளும், மேற்கு நாடுகளின் ‘நாகரீகப் புத்திஜீவிதங்களும்’, அண்டை நாட்டின் பிராந்திய வல்லரசுத் திமிருமாகச் சதிசெய்யும் இவ்வேளையில், விழிப்பாயிருந்து, விலைபோகாது, தூர அரசியல் நோக்குடன், ஈழத்தமிழர் போராட்டத்தை இதயத்தில் வரித்த தலைவனுக்கும் ‘மாசற்றோன்’ எனும் நாமம் சூட்டப்படட்டும். வித்தாய் வீழ்ந்த முத்துகளுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மீளப்பெறமுடியாதவை. மனிதர்களில் மகோன்னதமானவர்களின் கனவுகளை நனவாக்குவதைத் தவிர கடமையேதும் இல்லை.

றொபெஸ்பியரிடமிருந்து பெற்ற கனவை நிறைவாக்கக் கனலென உதித்தான் நெப்போலியன் எனும் வீர வேங்கை. வெற்றிமேல் வெற்றிவாகை சூடினான். கண்மூடி முழிக்கும் வேகத்தில் ஐரோப்பாவை அதிர வைத்தான். புயலெனஎழுந்த இவன் வேகத்தில் சருகென மறைந்தனர் எதிர்ப்புரட்சியாளர்களும் அடக்கு முறையாளர்களும். இவனது இராணுவ உத்திகளையும், தூர நோக்கையும், மனத்திடத்தையும், அஞ்சாத நெஞ்சையும், அசைக்கமுடியாத கொள்கை யுறுதியையும், தீர்க்கமான புத்திக்கூர்மையையும் கண்ட பிரஞ்சு தேசம் இவனிடம் தனது கனவைக்கையளித்தது.

சமகாலத்தவர்களின் எந்தத் தீர்ப்புகளுக்கும் இவன் அஞ்ச வில்லை. மாமனிதர்கள் வரலாற்றுக்கு மட்டுமே கணக்குக் கொடுக்கவேண்டியவர்கள். வரலாற்றுக்கு மட்டுமே அவர்களிடம் கணக்குக் கேட்கும் உரிமையுண்டு. மிகுதிகளை அவன் சல சலப்புகளாகவும், இயலாமைகளாகவும், அலறல்களாகவுமே கண்டான். பிரெஞ்சு தேசம் தனது வரலாற்றில் பதின்நான்கு தரம் தனது அரசியல் சாசனத்தை மாற்றிவிட்டது. ஆனால் நெப்போலியனால் உருவாக்கப்பட்ட சிவில் சட்டக் கோர்வையின் அடிப்படையில் கைவைக்கவில்லை. நெப்போலியனால் உருவாக்கப்பட்ட அரசியல் நிர்வாகக் கட்டுமானங்கள் இரண்டு நூற்றாண்டுக ளைத் தாண்டி இன்னமும் நிமிர்ந்து நிற்கின்றது. பிரெஞ்சுத் தேசியக்கட்டுமானத் தின் அதிசிறந்த இராணுவ மேதையாகவும், அதிசிறந்த அரசியல் ஞானியா கவும் இருந்த ஒரேயொருவன் நெப்போலியன்தான் என்பதை இன்று வரலாறு அறைந்து கூறுகிறது.

இது வரலாறு வழங்கிய தீர்ப்பு. ஈழத்தமிழரின் எதிர்கால வரலாறு வழங்கப்போகும் தீர்ப்பை இன்றே தமிழர்கள் வழங்கிவிட்டார்கள். தமது தேசியக் கட்டுமானத்தின் தலைவன் யாரென்பதை ஈழத்தமிழர்கள் ஐயமின்றி உணர்ந்து கொண்டுவிட்டார்கள். வரலாற்றின் தீர்ப்பிற்காய் காத்திருப்பவர்கள் இருந்து விட்டுப்போகட்டும். எகிப்திய அடிமை நுகத்திலிருந்து அறுத்தெடுத்துத் தன் எபிராய மக்களை விடுதலைக்கும், வாக்குறுதியளிக்கப்பட்ட பூமிக்குமாக அழைத்துச் சென்றான் தீர்க்கதரிசி மோசஸ். கட்டளைகளிட்டான், மீறியவர்க்குத் தண்டனை கொடுத்தான்.

கடக்கவேண்டியிருந்ததோ இரக்கமற்ற பாலைவனம். கடினப்பாதைகள் கண்டு மக்களோ அஞ்சினர். மீண்டும் அடிமைகளாகவே எகிப்துக்குச் சென்று விடுவோமே எனக் கெஞ்சினர். கடைமனிதர்களுக்கும், கண்ணீர் வடிப்பவர்களுக்கும் அரை வழியில் விடைகொடுத்து விட்டுத் தொடரவேண்டியிருந்த பயணமது. யாருக்குச் சுதந்திர பூமி வேண்டும்? அடிமைத்தளைகளை தமது உள்ளங்களிலிருந்து அறுத்தெறியாதோர் சுதந்திரத்தைப் பெற்றுத்தான் என்ன செய்யப்போகிறார்கள்?அடிமை நிலை மறந்த சுயாதீன மக்களை வழி நடத்த வேண்டி மோஸஸ் நாற்பது வருடங்கள் தன் மக்களைக் கொண்டலைந் தான். சினாய் பாலைவனத் தின் கொடூரங்களுக்கு மக்கள் முகம் கொடுத்தார்கள். இரக்க மற்ற பாலைவனப் பாதையில் மக்கள் துன்பத்தீயில் புடம் போடப்பட்டார்கள்.

நாற்பது வருடங்கள் துன்பத் தீயில் புடம்போடப்பட்ட மக்கள் இறுதியில் போராடித் தமக்கு வாக்குறுதியளிக்கப் பட்ட பூமியை அடைந்தார்கள்.

சுதந்திர பூமிக்குச் சுதந்திர மக்களை, அறிவில் மேம்படுத்தி, ஆற்றலில் உன்னதமானவர்களாக்கி, அடிமைத்தளையறுத்து, சமத்துவம் நிறுவி, சாதியழித்து, அழைத்துச் செல்லும் வல்லமைமிக்க தலைவன்!

இக்கனவை நனவாக்கி நீங்கள் காலத்தை வெல்ல வாழ்த்துகிறேன்.

இதுவன்றோ நாமனைவரும் வித்தாய் வீழ்ந்த முத்துகளுக்குக் கொடுத்த வாக்குறுதி. இதுவன்றோ நாம் நனவாக்கி அவர்களுக்கு காணிக்கையாச் செலுத்த வேண்டிய கனவுப்பூ.

இடருற்று, அடக்கு முறைக்குப் பலியாகிய ஈழத்தமிழரின் துணிவுச்சுடர் பிறந்து ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டன.

நீழ்காலம் ஒங்கியது ஒளிருமென வாழ்த்தி நிற்போம்.

மொழிபெயர்ப்பாளர், விமர்சகர்

படைப்பாளி.

பிரான்ஸ்.

வாசுதேவன்

வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி

Posted on

தமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு,

இன்று பொன்விழா கொண்டாடிடும், எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தமிழ் தேசியத் தலைவன் தம்பி பிரபாகரன் பற்றி நான் வெளிநாடுகளில் இருந்து வியந்து அவதானித்தவற்றில் சிலவற்றை, அவரின் பொன்விழா சம்பந்தமாக வெளியிடப்படும் இந்த மலரில் பதிவு செய்வதற்கு நான் பாக்கியம் பெற்றிருப்பதோடு, பெருமிதம் அடைய வேண்டியவனாகவும் இருக்கின்றேன். தம்பி பிரபாகரன் 1954ல், பிறந்த வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் உள்ள ஊரில், அவர் பிறப்பதற்கு சில வருடங்கள் முன்னர் பிறந்த ஒருவன் என்ற முறையிலும், 1970ம் ஆண்டு நான் பேராதனைப் பல்கலைக்கழகம் புகுவதற்கு ஆயத்தமாகின்ற வேளையிலே, தமிழ் மாணவர் பேரவையின் அங்குரார்ப்பண பகிரங்க நிகழ்ச்சியான மௌன ஊர்வலத்தில் (திருநெல்வேலிச் சந்தையடியில் ஆரம்பமாகி, யாழ் GREEN FIELD மைதானத்தில் முடிவடைந்த பொதுக்கூட்டத்தில்) கறுப்புத் துணியால் வாய் கட்டி கலந்து கொண்ட ஒருவன் என்ற முறையிலும் இந்த சிறு வியப்புக் கட்டுரையை பதிவு செய்வதற்கு தகுதியுடையவன் என்ற திருப்தியினால் உந்தப்பட்டவனாகவே இதனை வரைவதற்கு முன்வந்துள்ளேன்.

நான் எனது உயர் பட்டப் படிப்பிற்காக இலங்கையை விட்டு புறப்பட்ட வருடம் தான் (1978) தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தாம் மேற்கொண்ட 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு உரிமை கோரிய வருடம். தனது இளந்துளிர் வயதான 14வது பிராயத்தில் இந்தியச் சுதந்திரப் போராளிகளாகத் திகழ்ந்த சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் பகவத்சிங் ஆகியோரின் வழியைப் பின்பற்றி, தனக்கு வயதிற்கு மூத்தவர்களாகிய, ஒரே இலட்சியம் கொண்ட, இன்னும் 7 பேருடன் இணைந்து தலைமறைவாக செயற்பட ஆரம்பித்த தம்பி பிரபாகரன் 1978ல் ஏற்கனவே 10 வருடங்கள் தலைமறைவான விதத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டது பின்னர்தான் என்போன்றோருக்கு எல்லாம் தெரிய வந்தது.

இக்காலப்பகுதியில் தம்பி பிரபாகரன் பற்றி எமக்குத் தெரிந்தது, இவர் இலங்கைப் பொலிசாரால் தேடப்பட்டு வந்த தமிழ்த் தீவிரவாதிகளில் ஒருவர் என்பது மட்டுமேயாகும். தம்பி பிரபாகரனின் படம் உட்பட்ட சில தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் படங்கள் அடங்கிய சுவரொட்டி ஒன்று, பேராதனைப் பல்கலைக்கழகப் புகையிரத நிலையமான ‘சரசவி உயன’ உட்பட பல புகையிரத நிலையங்களின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தமையாலேயே இது எமக்கெல்லாம் தெரிய வந்தது. இக்காலப்பகுதியில் நான் இதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பொறுப்பேற்ற பின்னர் எனது அலுவலக அறைக்கு அடிக்கடி விஜயம் செய்யும், அப்பொழுது மாணவனாகவும், ஒரு JVP ஆதரவாளனாகவும் இருந்தவரும், தற்போது தம்பி பிரபாகரனை ஒரு பயங்கரவாதியென்று உலகிற்கு பறை சாற்றும் பணியில் முன்னணியில் திகழ்பவருமான jayathilaka, என்னுடன் இந்தச் சுவரொட்டியில் இருந்த இளைஞர்கள் பற்றியும், அவர்களின் சாதனைகளைப் பற்றியும் வியந்து கதைப்பது வழக்கம்.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியன்றில் இவருடன் நான் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைபற்றி வாதாடியபோது, dayan என்றொருவர் அப்போது எனது வாழ்வில் குறுக்கிடாது இருந்திருந்தால், நான் ஊடகத்துறையினூடாக எமது மக்களின் உரிமைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பங்களிப்பை இந்தச் சிறு அளவிலேனும் செய்யத்தூண்டப்பட்டிருப்பேனா என்று ஒருகணம் சிந்தித்ததுமுண்டு. அக்காலம் தொடக்கம் தம்பி பிரபாகரனின் செயற்பாடுகளை வெளிநாடுகளிலிருந்து, பெரும்பாலும் ஊடகங்களுடாக கூர்மையாக அவதானித்து வந்ததால்தான் நான் இன்று எனது இந்தச் சிறு வியப்புக்கட்டுரையை வரையக்கூடிய நிலையில் உள்ளேன்.

பள்ளிப் பையனாக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய தம்பி பிரபாகரன், ஒருவித இராணுவக் கல்லூரிப் பயிற்சியுமின்றி, உலகின் எந்தவொரு விடுதலை இயக்க தளபதியையும் விட அதிசிறந்த தானைத் தளபதியாக யாவராலும் மதிக்கப்படுவதற்கு, அவர் தான் கொண்ட இலட்சியத்தில் கொண்டிருக்கும் உறுதியும், அவரின் வயது முதிர முதிர இந்த உறுதியும் வளர்ந்து வேரூன்றியமையுமே முக்கிய காரணமென்று நான் மதிப்பிடுகின்றேன். 1958ம் ஆண்டு நடைபெற்ற தமிழருக்கெதிரான இன ஒழிப்பு நடவடிக்கையின்போது, உருகும் தாரினுள் அமிழ்த்தி கொடூரமாக கோயில் ஐயர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை பற்றி ஒரு விதவைப் பெண் வர்ணித்ததைக் கேட்டதனால், இனியும் இளந்தமிழர் பார்த்துக் கொண்டிருந்தால் அது அடிமைத்தனம் என்று எண்ணியே தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்ததாக நாம் அறிகின்றோம்.

தான் எடுத்திருக்கும் பாதை வெகு கரடுமுரடானது என்பதை அவர் உணர்ந்திருந்தும், தனது இலட்சியத்தை அடைவதற்கு தியாகங்களை செய்வதற்கு அவர் தனது இளவயதிலே தயாராகி விட்டதற்கு ஆதாரங்களும் உண்டு. அவர் சார்ந்திருந்த ஆரம்ப சிறு குழுவானது தமது செயற்பாடுகளுக்கென ஒரு கைத்துப்பாக்கியை கொள்வனவு செய்ய விரும்பியபோது தேவைப்பட்ட ரூ. 150ஐ திரட்டுவதற்காக, இவரின் ஒரே ஒரு சொத்தாக அப்போது இவரிடமிருந்த இவரது சகோதரியின் திருமணத்தின் போது இவரிற்கு கிடைத்த தங்க கணையாழியை விற்று, ரூ. 50ஐ திரட்டிக் கொடுத்ததுடன் ஆரம்பித்த இவரது தியாகம், தனது வாழ்நாளின் பாதியை சக பிரஜைகள் போன்று உலகை அனுபவிக்க முடியாத விதத்தில் கழித்தபடி தொடர்கின்றது.

ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தின் போது பல சோதனைகளைத் தம்பி பிரபாகரன் எதிர்கொள்ள நேர்ந்தது. இவரின் பார்வையாளராக இருந்த எமக்கெல்லாம் பலதடவைகள் மனம் தளர்ந்த போதிலும், அவர் மனம் தளராது செயற்பட்டு அந்தத் தடைகளையெல்லாம் தாண்டுவதற்கு அவர் தனது இலட்சியத்தில் கொண்டிருந்த உறுதியே உறுதுணையாக விளங்கி இருந்திருக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இதுபற்றி நான் தம்பட்டம் அடிக்க வேண்டிய அவசியமில்லை. இதுபற்றி அந்தக்காலகட்டங்களில் இந்தச் சோதனைகளையே உருவாக்கக் காலாக இருந்த சிலரே இதற்குச் சாட்சியம் கூறியுள்ளனர். தம்பி பிரபாகரன் எதிர்கொண்ட முதல் பாரிய சோதனை அவர்மேல் பிரதமர் ராஜீவ் காந்தி நிர்வாகத்தால் திணிக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும்.

இதனூடாகத்தான் அவர் முதன் முதலாகப் பாரிய ஒரு அரசியல் இராணுவச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததை யாவரும் அறிவர். இந்தச் சோதனையை தம்பி பிரபாகரன் எவ்வாறு தான்கொண்ட இலட்சியத்தில் அணுவும் அசையாது செயற்பட்டு முறியடித்தார் என்பது இப்பொழுது பலராலும் பதியப்பட்டிருக்கும் சரித்திர மாகும். இதில் முக்கியமானவர் இந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரும், அப்பொழுது இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராக விளங்கியவருமான joythindra dixit ஆவார். இவர் தனது அனுபவத்தைப் பின்னர் 1998ம் ஆண்டு தான் எழுதிய “Assignment colombo” என்ற புத்தகத்தில், தனது கருத்துக்களாகக் குறிப்பிட்டுள்ள சிலவற்றை இங்கு பதிவு செய்வது பொருத்தமானது என எண்ணுகிறேன்.

தமிழர்களின் நலன்களைப் பிரதி நிதித்துவப்படுத்துவதில் ஒரு சிறந்த அரசியல் – இராணுவ சக்தியாக முன்நிலைக்குத் த. ஈ. வி. புலிகள் உயர்ந்ததற்கு Dixit அவர்கள் 6 காரணங்களைத் தனது புத்தகத்தில் நிரல்ப்படுத்தியுள்ளார். அதிலே முதலாவதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். முதலாவதாக, “இந்த இயக்கத்தின் தலைவரான வே. பிரபாகரனிடம் காணப்படும் கட்டுப்பாடு, மனவுறுதி, இலங்கைத் தமிழரின் மீட்சி என்ற இலட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணம் செய்துள்ளமை ஆகிய குணாதிசயங்கள் ஆகும். இவர் யாராலும் எப்படி விமர்சிக்கப்பட்டாலும், இவரின் நெஞ்சில் சுதந்திரதாகம் சுவாலை விட்டெரிந்து கொண்டிருப்பதையும், இவரிடம் தன்னை அதற்கு அர்ப்பணிக்கும் சுபாவம் உள்ளதென்பதையும், இவர் இயற்கையான இராணுவ வல்லமையைக் கொடையாகப் பெற்ற ஒருவர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது”

என தனது புத்தகத்தில் தம்பி பிரபாகரனைப் புகழ்ந்துள்ளார் Dixit அவர்கள். இதேபோன்றுதான் இந்திய அமைதி காக்கும் படை முழுவதற்கும் பொறுப்பாகப் பணிபுரிந்த லெப்டினென்ட் ஜெனரல் Dipinder singh அவர்களும் தான் எழுதிய ‘IPKF in SRILANKA’ என்ற புத்தகத்தில் தம்பி பிரபாகரனுக்குப் புகழாரம் சூட்டியதோடு நின்றுவிடாது, எப்பொழுதும் இந்திய அமைதிப்படையினரைத் தம்மேல் ஆரோக்கியமான மதிப்பு வைக்க வைத்துள்ள வியக்கத்தகுந்த அதி அளவிலான ஊக்கம் மற்றும் போர்புரியும் திறமை கொண்ட விடுதலைப்புலிகளுக்கு, தனது புத்தகமானது இடது கையால் வழங்கும் ஒரு salute என்றும் வர்ணித்துள்ளமை தம்பி பிரபாகரனின் இலட்சிய உறுதியைக் கௌரவிப்பதாகவே அமைந்துள்ளது.

இந்திய அமைதி காக்கும் படையின் யாழ். பகுதித் தளபதியாகப் பணிபுரிந்த லெப்டினென்ட் ஜெனரல் s.c.sardesh pande வெளியிட்டுள்ள ‘Assignment jaffna என்ற புத்தகத்திலும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளிற்குப் புத்தக ஆசிரியரால் புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த இயக்கத்திடம் காணப்படும் கட்டுப்பாடு, தம்மை எதற்கும் அர்ப்பணிக்கும் தன்மை, உறுதி, ஒரு குறிக் கோளை நோக்கிச் செயற்படும் திறமை, மற்றும் தொழில்நுட்பவியல் என்பவற்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் மேல் நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கின்றேன் என்றும், தமிழர் மத்தியில் நிலவும் உணர்வலைகளின் பிரதிபலிப்பே த. ஈ. வி. புலிகள் என்றும், இந்த உணர்வலைகள் தணியா திருக்கும் வரை விடுதலைப் புலிகளை அழித்துவிட முடியாது என்ற அபிப்பிராயத்துடனே நான் திரும்பினேன் என்றும் லெப்டினென்ட் ஜெனரல் pande அவர்கள் தெரிவித்துள்ளமை இந்த இயக்கத்தின் தலைவரின் இலட்சிய உறுதிக்குச் சான்று பகர்வதாகவே அமைந்துள்ளது.

1970களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல புரட்சிகரத் தாக்குதல்களை அடக்குவதற்காக, hitler rommel ற்குக் கொடுத்த கட்டளை போன்று, காலம் சென்ற ஜனாதிபதி யி.ஸி.ஜெயவர்த்தனா தனது மருமகனான brigadier weeratunga விற்கு, வடக்கிற்குச் சென்று 6 மாதத்தில் எல்லாவித பயங்கரவாதத்தையும் அடக்கி வரும்படி உத்தரவிட்டிருந்தார். brigadier weeratunga இந்தக் கட்டளையை நிறைவேற்ற அவருக்குப் போதிய வல்லமையைக் கொடுக்கும் நோக்குடன் 1979ம் ஆண்டு july மாதம் கொடூரமான அந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நடைமுறைக்குக் கொண்டுவந்தார் ஜனாதிபதி ஜெயவர்த்தனா. ஆனால் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்த இயக்கத்தை மரபுவழி இராணுவத்தைக் கொண்ட சிறீலங்காப் படையினை எதிர்த்து ஓயாத அலைகள் I,II,III என்று 3 பாரிய யுத்தங்களைப் புரிந்து பீரங்கிப்படையணி, தாங்கி எதிர்ப்புப் படையணி, கடற்புலி என்ற கடற்படை ஒரு சிறிய வான்படை என்பவற்றைக் கொண்டதாக, சிறீலங்கா இராணுவத்திற்குச் சமபலம் உள்ள, மரபுவழி யுத்தம் புரியும் வல்லமை பொருந்திய ஒரு இராணுவ இயக்கமாக த. ஈ. வி. புலிகளை மாற்றியமைத்துப் பதிலடி வழங்கினார் தளபதி தம்பி பிரபாகரன் அவர்கள்.

இந்தச் சாதனையை நிலைநாட்டுவதற்கு இவரிடம் காணப்படும் இலட்சிய உறுதியே முக்கிய காரணியாக விளங்கியது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இயற்கையே தனது நண்பனென்றும், வாழ்க்கையே தனது தத்துவ ஆசானென்றும், சரித்திரமே தனது வழிகாட்டியெனவும் கூறிக்கொள்ளும் தம்பி பிரபாகரன், மனிதகுல மீட்புக்காக யேசுபிரான் எப்படித் தன்னைப் பிறர் இழிவுபடுத்துவதைப் பொருட்படுத்தாது வாழ்ந்து காட்டினாரோ, அவ்வழியைப் பின்பற்றித் தம்பி பிரபாகரனும் தமிழ் மக்களின் மீட்பிற்காக தான் கொண்ட இலட்சியத்தை அடைவதற்காகத் தன்னைப் பிறர் எந்தவிதமான இழிவிற்கு உட்படுத்துவதையும் சகித்துக் கொள்ளவும், சிலசமயங்களில் இதனால் பூரிப்படையவும் தயாராக உள்ளமையானது அவரின் இலட்சியத்திற்கான உறுதிக்குச் சான்று பகர்வதாகவே அமைகின்றது.

சிறீலங்கா அரசினால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் வரிசையில் முதலாவது இடத்தில் தம்பி பிரபாகரன் விளங்குவது பற்றி அவரின் உணர்வலைகள் எப்படியாக இருக்கின்றது என்று அவரிடம் ஒரு தடவை பத்திரிகையாளர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்குத் தம்பி பிரபாகரன் பின்வருமாறு பதிலளித்திருந்தார்; பிரித்தானியர்கள் ஒரு Irish இனத்தவரைப் பயங்கரவாதி என்று குற்றம் சுமத்தினால் அவர் உண்மையான நாட்டுப் பற்றாளன் என்று ஒரு ஐரிஸ் தலைவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அதேபோன்றுதான் சிறீலங்கா அரசு என்னைத் தாம் தேடி வருபவர்களில் அதிமுக்கியமானவர் என்று குறிப்பிடும் போது நான் ஒரு உண்மையான தமிழ்த் தேசப்பற்றாளன் என்பதையே அது சுட்டிக் காட்டுகின்றது. ஆகவே தேடப்பட்டு வருபவர்களில் அதிமுக்கியமானவனாகப் பிறர் என்னைக் கருதுவது பற்றி நான் பெருமையடைகின்றேன்.

இவரின் இந்தக் கூற்றானது, இழிமையின் விளிம்பிற்குத்தள்ளப்படும் சந்தர்ப்பத்திலும் கூட அதனை ஒரு தியாகமாக மதித்துத் தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக இருக்க தம்பி பிரபாகரன் விரும்புவதையே, எடுத்துக் காட்டுகின்றது. எமது போராட்ட வரலாறுபற்றி BBC, Voice of america போன்ற சர்வதேச வானொலிச் சேவைகளுடாக விமர்சிக்கப்பட்டவற்றையும், இதுபற்றிய முக்கிய செய்திகளையும் 1983ம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்ற நாள் தொடக்கம் நான் நாளாந்தம் கேட்டு, ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து வந்தேன். இந்தியப்படை யாழ் மண்ணில் சென்று இறங்கியதையும், தம்பி பிரபாகரன் சுதுமலைக் கூட்டத்தில் அதனை வரவேற்றுப் பேசியதையும், pacific தீவு ஒன்றிலிருந்து கேட்டு ஒலிப்பதிவு செய்து கொண்டதும் எமது போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது என்று தப்புக்கணக்குப் போட்டு எனது ஒலிப்பதிவு செய்யும் வேலையையும் அன்றுடன் நிறுத்திக் கொண்டேன்.

ஆனால் தம்பி பிரபாகரனோ பின்னர் இந்தியப் படைகளால் வன்னிக் காட்டினுள் வைத்துச் சுற்றி வளைக்கப்பட்ட போதிலும் சரி, பின்னர் யாழ்குடா நாட்டைச் சிறீலங்காப் படைகள் கைப்பற்றிய போது சாதுரியமாகப் பின்வாங்கி வன்னிக் காட்டினுள் மீண்டும் புகுந்த போதிலும் சரி மனம் தளராது தான் கொண்ட இலட்சியத்தில் இருந்து ஒரு அணுவேனும் விலகாது தான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நின்றதன் பயனாகவே த.ஈ.வி.புலிகள் இயக்கம் இன்று தற்போதைய சர்வதேச அரசியல் நிலைப்பாடுகள் மத்தியிலும், ஆல்போல் உலகளாவிய ரீதியில் கிளைகள் பரப்பி, நன்றாக விழுதுகள் பரப்பி வேரூன்றி நிற்கின்றது. இதனூடாகத் தம்பி பிரபாகரனுக்கும் என்போன்றோருக்கும் இடையில் இருக்கும் பாரிய வித்தியாசத்தைக் காண்கின்றேன்.

தற்போது ஸ்தம்பிதம் அடைந்து போயிருக்கும் சமாதான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் அரசியல் சாணக்கியத்துடன் ஆரம்பித்து வைத்த தம்பி பிரபாகரன், பின்னர் சிறீலங்கா அரசும் அதற்கு முண்டு கொடுத்துத் தத்தமது இலட்சியங்களை அடைய முண்டியடித்துக் கொள்ளும் பிறநாட்டு அரசுகளும், தமிழர் தரப்பினை ஏமாற்ற முற்படுவதைத் தீர்க்க தரிசனத்துடன் உணர்ந்து கொண்ட தம்பி பிரபாகரன், இடைக்காலத் தன்னாட்சி சபைப் பிரேரணையை உருவாக்கிய விதமும் இதனைச் சமர்ப்பித்துத் தமிழர் தரப்பிற்கு எதிராகச் சதி செய்ய முயன்ற சக்திகள் அனைத்தினதும் திட்டங்களை அவை முன்னெடுத்துச் செல்ல முடியாதவண்ணம் தடைபோட்டுள்ளமையானது அவர் தனது இலட்சியத்தை அடைவதற்காக எந்தச் சக்தியையும் எதிர்க்கத் தயங்கப் போவதில்லை என்பதைச் சந்தேகம் எதுவுமின்றி எடுத்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.

தம்பி பிரபாகரனின் இலட்சிய உறுதி பற்றி நான் வியப்பதற்கான இறுதியான காரணம் அவரது எந்தவொரு புறச் சக்தியிலும் தங்கி வாழாக் கொள்கையாகும். plote,eprlf, telo ,epdp, போன்ற மற்றத் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் யாவும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவிலோ, சிறீலங்காவிலோ அல்லது வேறு வெளிநாட்டுச் சக்திகளிலோ தங்கிச் செயற்பட்டதாலேயே, இவை யாவும் இன்று கூலிக்கும்பல்களாக மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இவர்களும் ஆயுதப் போராட்டத்தில் குதித்த போது தம்பி பிரபாகரனின் அதே இலட்சியத்துடன்தான் களத்தில் இறங்கியவர்கள். ஆனால் அவர்கள் தம்பி பிரபாகரனைப்போன்று தாம் கொண்ட இலட்சியத்தில் உறுதியாகத் தளம்பாது நின்று பிடிக்க முடியாதுபோனதால்தான் இன்று கூலிக்கும்பல்களாகவும், எட்டப்பன் கூட்டங்களாகவும் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது விடயத்தில் தம்பி பிரபாகரன் இளவயதில் யார் வழியைப் பின்பற்றினாரோ அதே சுபாஸ் சந்திரபோஸ் அவர்களும் பிரித்தானியர்களை இந்திய மண்ணிலிருந்து வெளியேற்ற புறச்சக்திகளை நம்பி எப்படி ஏமாற்றமடைந்தார் என்று வெகு அண்மையில் BBC வெளியிட்டுள்ள தகவல்களை நான் இங்கு குறிப்பிடாதிருக்க முடியாது. பிரித்தானிய உளவுத்துறை 1945ம் ஆண்டில் அறிந்து, 2021ம் ஆண்டு வரை வெளியிடுவதில்லை என்று ஒளித்து வைத்திருந்த இத்தகவல் இப்பொழுது 17 வருடங்கள் முன் கூட்டியே BBCக்குக் கிடைத்துள்ளது. இதன்படி சுபாஸ் சந்திரபோஸ் தனது இலட்சியத்தை அடைவதற்காகக் கள்ளமாக ஜேர்மனி நாட்டினுள் புகுந்து, hitlerன் உதவியை நாடி, அவர்வசம் இருந்த இந்திய போர்க்கைதிகளிலிருந்து திரட்டிய ‘free India legion’ எனும் 100, 000 இந்தியப் போர்வீரர்கள் கொண்ட படையென்றைப் பிரயோகித்து பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த இந்தியாவை முற்றுகையிடுவதாகத் திட்டம் தீட்டப்பட்டது.

ஆனால் முதலில் hitler படைகள் சோவியத் யூனியனிற்குள் புகுந்தபோது விரக்தியடைந்த இடதுசாரிக் கொள்கை கொண்ட சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள், stalingarg சம்பவங்களின் பின்னர் பின்வாங்கி ஓடிக்கொண்டிருந்த hitler படைகளினுதவியுடன் தனது இலட்சியத்தை அடைய முடியாது என்பதை அப்பொழுது உணர்ந்து கொண்டார். இதனால் தான் திரட்டிய இந்தியப் படைக்கு துரோகம் இழைக்கும் விதத்தில் 1943ம் ஆண்டு februaryமாதம் யப்பானிற்குப் புறப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் சென்று விட்டார். இதன்பின்னர் தமது படைகளில் உள்ள இந்தியரை நம்பமுடியாது என்று பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் கருதி இந்தியாவிற்குச் சுதந்திரத்தை வழங்க முன்னதாகவே 1945ம் ஆண்டு சுபாஸ் சந்திரபோஸ் இறந்து விட்டதாக இந்தப் பிரித்தானியரால் இவ்வளவு காலமும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றித் தெரிந்தோ தெரியாமலோ, தம்பி பிரபாகரன் இதுவரை எந்தச் சக்தியினதும் துணையைப் பெறாமலோ எதிர்பாராமலோ இயங்கி வருவது அவர் தனது இலட்சியத்தில் கொண்டுள்ள உறுதியை மாத்திரமன்றி அவருக்கே உரித்தான தூரதிருஸ்டியாக விடயங்களை நோக்கும் திறமையையும் வெளிக்காட்டுகின்றது. இப்படியான ஒரு தலைவன் தமிழ் மக்களிற்கு இந்தக்காலகட்டத்தில் கிடைத்திருப்பதற்குத் தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்களென்றே கருதுகின்றேன். இந்த இலட்சியவாதியும், தியாகியும், உன்னத தளபதியுமாக விளங்கும் தம்பி பிரபாகரனின் வழிநடத்தலிலேயே எமது மக்களின் சுபீட்சம் அடையப்பட வேண்டும் என்பதே எனது அவாவாகும். இப்படியான எனது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தம்பி பிரபாகரனை நேரில் சந்திக்கச் சிறீலங்காவினுள் நான் பாதுகாப்பாக அடி எடுத்து வைக்கக்கூடிய நாள் விரைவில் மலரும் என்ற எதிர்பார்ப்புடன்தான் நான் நாட்களை எண்ணியவண்ணம் காத்திருக்கின்றேன். இந்தத் தலைவன் இன்று தன் பிறந்தநாள், பொன்விழாவைக் கண்டு உவகையுறும் வேளையில் இவர் ஆயுள் நூறும் கண்டு, ஈழத் தமிழ் மக்களோடு சாதாரண மானிடர் போன்று கலந்து வாழும் பாக்கியத்தை அதிவிரைவில் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றேன்.

விரிவுரையாளர்,

அரசியல் ஆய்வாளர்,

அவுஸ்திரேலியா.

கலாநிதி விக்டர்

இராஜகுலேந்திரன்

வரலாற்று நாயகனுக்கு ஒரு வாழ்த்து

Posted on

வெறும் தாள் கிழித்து, பேனை எடுத்து எழுதமுடியுமா இதனை? மேசை விரித்து அதன் முன் அமர்ந்து, ஆழ்ந்து சிந்தித்து அதன் பின் எழுத முடியுமா இதனை? வெறும் மையா இதனை எழுதுவது?

வெள்ளைத் தாளில், அர்த்தமேயில்லாது கறுப்பு மை படர வரும் கட்டுரைதானா இது? நம் உணர்வு எடுத்து நம் உயிரினால் எழுத வேண்டிய ஒன்றல்லவா இது! தமிழ் மானம் என்னும் எழுதுகோல் எடுத்து, உண்மை, நேர்மை, கடமை என்னும் ‘மை’களில் தோய்த்து எழுதப்படவேண்டிய வரலாறு அல்லவா இது! தன்னிலையில் தாழாமைதாழ்வுற்றால் உயிர் வாழாமை என்றும் ‘மை’ கொண்டு, உணர்வு செறிந்த உயிர் என்னும் எழுதுகோல் எடுத்து இதனை எழுதத் தொடங்குகின்றேன். அரைநூற்றாண்டு ஆயிற்றா?அட, முருகா, முத்தமிழ்க் குமரா! ஐம்பது ஆண்டுகள் போயிற்றா?அல்லவே! அதனை நான் நம்பேன். இப்பொழுது போல் இருக்கின்றது எல்லாம்.

இதோ இப்பொழுது தான்.1974ஆம் ஆண்டு. தைத்திங்கள். தமிழர் தலைநகர் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு. தமிழர் வெள்ளம் கண்டு, தமிழர் வேகம் கண்டு சிங்கள அரசு சினந்தது. சீறிப்பாய்ந்தது. ஒன்பது தமிழர்களைக் கொன்றது. ஒரு நூறு தமிழரைக் காயப்படுத்தியது. அது கண்டு பல் கடித்தாயே! மனம் வெடித்தாயே! நான் அறிய, உள்ளே கனன்ற, உன்னுள் கனன்ற தீப்பிழம்புகள் சீறிக்கிளம்பத் தொடங்கியது அந்த நாள்தான். சிறுத்தையென பீறிக்கொண்டோடியது அதே நாள்தான். அது முடிந்து முழுதாய் முப்பது வருடங்கள் ஓடிவிட்டனவா? அட, அது மகா ஆச்சரியம்! ஐம்பது ஆண்டுகளில், முதல் பதினைந்து ஆண்டுகள் உன் அம்மாவுடன் போயிருக்கும். அப்பாவுடன் கழிந்திருக்கும். அயலாருடனும் சென்றிருக்கும். ஆனால் மீதி -முழுதாய் முப்பத்தைந்து வருடங்கள் எப்படிப் போயிருக்கும் என்று நான் எப்படிச் சொல்ல? சொல்லும் தகுதி எனக்குண்டா? சூழ உள்ள தோழர்களுக்குத் தெரியும்.

சொல்லியிருப்பாய். துயர்பட்ட நாளை, வதைபட்ட வாழ்வை, சொல்லியிருப்பாய். துடித்தெழுந்ததை, தோளில் தூக்கிய வீரத்தை, வெடித்துக் கிளம்பியதை, வெற்றி சமைத்ததை சொல்லியிருப்பாய். கடல் கடந்ததை, காட்டினை ஆண்டதை, திடல் ஏறி, திரையெட்டும் அளந்ததை, விடலைப்பருவ வாழ்வு, வீணாய்ப்போனதை, வீரனாய் உடல் எடுத்து வந்ததை, ஓர்மம் கொண்டு போரிட்டதைச் சொல்லியிருப்பாய். உன் தோழர்களுக்குச் சொல்லியிருப்பாய். அதிகம் பேசமாட்டாயாமே! ஆழ்ந்து சிந்திப்பாய். ஆரும் ஏதும் கேட்டால் உன் புன்னகை பேசும். அது போதும் என்று விடுவாயாமே! புரிகின்றது. பேசிப்பேசியே அழிந்த வரலாறு அல்லவா நமது வரலாறு. எழுதி, எழுதியே கிழிந்த வாழ்வல்லவா நமது வாழ்வு! முன்னர் ஒருவர் இருந்தார்.

கப்பல் ஏறி, கடல் கடந்து இங்கிலாந்து சென்று தொண்டை ஈரம் வத்தும்வரை பேசினார். பேசினார். பேசிக்கொண்டேயிருந்தார்..பின்னர் ஒருவர் வந்தார். சோல்பரிப் பிரபுமுன், தொடர்ந்து பத்து மணித்தியாலம் பேசிச் சாதனை புரிந்தார். பிறகும் ஒருவர் வந்தார். ஆள்வோர் எல்லோருடனும் ஒப்பந் தம் எழுதினார். ஒப்பந்தம் ஒப்பந்தமாய் எழுதினார். ஒன்றும் சொல்லவில்லை. கிழிபட்டது. அதன் பிறகும் இன்னொருவர் வந்தார். அடுக்கு மொழியில் அழகு தமிழில் அழுத்தம் திருத்தமாய் பேசினார். ‘துப்பாக்கிக் குண்டு – விளையாட்டுப் பந்து, ‘தூக்குமேடை – பஞ்சுமெத்தை’ கர்ச்சித்தார். இரத்தப் பொட்டிட்டோம் நாம். என்ன செய்தார் அவர்? சோரம் போனார்! என்ன செய்தோம் நாம்? யாது செய்வர் தமிழ் மக்கள்? பஞ்சு மெத்தையைத்தான் கொடுக்க முடியவில்லை.

‘இந்தா பிடி’ என்று விளையாட்டுப் பந்தைக் கொடுத்து வீட்டை அனுப்பினர். பேசியும், எழுதியும், யோசித்தும், யாசித்தும் எங்கள் வரலாறு எழுதப்பட்டது. எங்கள் வாழ்வு கருக்கப்பட்டது. பேசவில்லை நீ! எழுதவில்லை நீ! யாசிக்கவில்லை நீ!‘இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி’இது ஒன்றையே நீ இயம்பினாய். இதற்கும் அப்பால் செயல் ஒன்றையே நீ நம்பினாய். செய்தாய். செயற்கரிய செய்தாய். ஈரம் படர்ந்த நமது நாளில், வீரம் விளைந்த வாழ்வை எமதாக்கினாய். இன்னும் செய்தாய். நமது தேசத்தில், நமது மண்ணில் நமது வரலாற்றை நீ திருத்தி எழுதவில்லை! திருப்பி எழுதினாய். மாற்றி எழுதினாய். மகத்தான எழுத்து அது! மகத்தான வாழ்வு அது. வரலாற்றின் பக்கங்களில் பலர் வருகின்றார்கள். போகின்றார்கள். வரலாற்றின் பக்கங்களில் பலர் எழுதப்படுகிறார்கள்.

ஆனால் வரலாற்றை மாற்றி எழுதியவர்கள் ஒரு சிலர். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் போட்டவர்கள் ஒரு சிலர். லெனின், மாவோ சேதுங், ஹொசிமின், சேகுவேரா என்று அவர் பெயர்கள். அந்த ஒரு சிலரில் ஒருவனாய், உயர்ந்தவனாய், உன்னத தலைவனாய் நீ ஆனாய். எங்கள் நெஞ்சில் நிறைந்து போனாய். அனுபவமே ஆசானாய், ஆற்றலே வழிகாட்டியாய், உன் வாழ்வை அமைத்தாய். அதனூடு தமிழர் வாழ்வை செதுக்கினாய். செப்பனிட்டாய். என்னிடம் சில கேள்விகள் உள்ளன. கேட்கவா?

தமிழர் நாம் தலையுயர்த்தி நிமிர்ந்தது யாரினால்? நெஞ்சு நிமிர்த்தி எழுந்தது எவரினால்? இப்பொழுதெல்லாம் நம் கால்கள் நேராய் நடக்கின்றன. கோணல் நடை இல்லை. கூனல் முதுகு இல்லை. நெஞ்சு நிமிர்த்தி நாம் நேராய் நடந்தோம்! கண்கள் ஒளிர, நடையில் வேகம் வந்ததுவே! கைகள் வீசி, இந்த காற்று நமது, இந்த வயல் நமது, இந்த வானம் நமது, இந்த வாழ்வு நமது என்ற உயிர்ப்புடன் ஓர் அடி எடுத்து வைத்தோமே! இவையெல்லாம் யாரினால்? இந்தக் கால் நேராய் நடந்தது எவரினால்? நாம் தமிழர் என்று சொல்லிப் பெருமைப்பட எவர் காரணம்? பாருங்கள். நான் பொய்யுரைக்கின்றேனா? இப்பொழுது தமிழரின் தலைகள் குனிவதில்லையே நேரே பார்த்து பீடுநடை போடுகின்றனவே! இதற்கெல்லாம் காரணம் யார்? புளுகு அவிழ்த்து விடுகின்றேன் என்றா சொல்கின்றீர்கள்? இப்பொழுது பாருங்கள். தமிழர்களைப் பாருங்கள். அவர்கள் தலை நிமிர்த்தி நடப்பதைப் பாருங்கள்.

நாம் தமிழர்களைத்தான் சொல்கின்றேன். தறுதலைகளை அல்ல. போலிகளை, பொய்யர்களை, போக்கிரிகளை அல்ல. தமிழர்களைத்தான் சொல்கின்றேன் தமிழர் நாம் தலை நிமிர்த்தி நடக்க எவர் காரணம்? ‘மறவர் படைதான் தமிழ்ப்படை – குலமானம் ஒன்றுதான் அடிப்படை’என்று சொல்ல வைத்தவர் யார்? ‘வெறிகொள் தமிழர் புலிப்படை -அவர்வெல்வர் என்பது வெளிப்படை’என்று உணரவைத்தவர் எவர்? நம்மால் இயன்றதை நாம் செய்வோம் என்னும் நம்பிக்கை தந்தவர் யார்? இயன்றது, இமயம் அளவு உயர்ந்தது என்னும் ஓர்மத்தை தந்தவர் எவர்? எம்பலம் எத்தகையது என்று எவரினால் நாம் அறிந்தோம். யானை தன் பலம் அறியாதாம். சிறிய நூல் கொண்டு கட்டினும் தன்னை அடக்கிக் கொள்ளும் யானை மிரண்டால், திமிறி எழுந்தால், காடே கொள்ளாதாம்.

இந்த விதமாய் நாம் எழுந்தோமே! யாரினால் இது சாத்தியமாயிற்று? நம்முள்ளிருந்து முகிழ்ந்த ஒருவரா நமக்கு இத்தனை வல்லபம் தந்தவர்? நமது மண்ணிலா இந்த உன்னதம் விளைந்தது? நமது மண்ணா இந்த மகத்துவம் படைத்தது? நமது கடலில் விளைந்த உப்பா நமக்கு இத்தனை ரோசம் தந்தது? நமது மரத்தில் கனிந்த பழமா இத்தனை இனிமை தந்தது? ஆச்சரியம் ஆச்சரியமாக எத்தனை கேள்விகள்! அட, என்று வியந்துபோக எத்தனை கேள்விகள்! நமக்கு மானம் இருக்கின்றதா? நமக்கு ரோசம் இருக்கின்றதா?நமக்கு உணர்வு இருக்கின்றதா? நமக்கு உரிமை வேண்டுமா? மானம், ரோசம், உணர்வு, உரிமை என்றால் என்னவென்று எமக்குக் காட்டியவர் யார்? மானத்துடன், ரோசத்துடன் உணர்வுடன் எப்படி வாழ்வது என்று எங்களுக்கு உரைத்தவர் யார்? உறுதி என்றால் எப்படி? வலிமை என்றால் என்ன? வீரம் என்றால் எத்தகையது? இறுதிவரை போராடுவது எங்ஙனம்?

இலட்சியம் ஈடேறும்வரை நின்று பிடிப்பது எப்படி? எதற்கும் விட்டுக் கொடுக்கா வீரம்கொள்கையிலிருந்து விலகிப் போகா ஓர்மம் இவற்றையெல்லாம் எமக்கு உணர்த்தியவர் யார்? உரமுடனும், ஓர்மத்துடனும், உத்வேகத்துடனும் போரை முன்னெடுப்பது எவ்வாறு என்று எமக்குச் சொல்லித் தந்தவர் யார்?ஒருமுறை நரம்புகளைச் சுண்டிப் பாருங்கள். நரம்புகள் அதிரும். மானம், ரோசம், உணர்வு இருக்கின்றன என்று சொல்லி அவை அதிரும். இந்த அதிரும் நரம்புகளை எங்களுக்குள் ஆக்கியவர் யார்? கொட்டும் வெற்றிமுரசை எங்களுக்குள் தட்டியவர் யார்? திக்கெட்டும் பட்டொளி வீசிப்பறக்கும் தமிழர் கொடியை உலகத் தமிழர் நெஞ்சில் ஏற்றியவர் யார்? கழுத்தில் கறுப்புக் கயிறு கட்டி, நெஞ்சில் கடும் நஞ்சைச் சுமந்து, களத்தில், சுடுகலன் கொண்டு, எதிரியின் உயிரைக் சூறையாடி, இத்தனை வெற்றி சமைத்தாரே! யாரை நம்பி அவர் போரினுள் புகுந்தார்? தலைவன் நாமம் உச்சரித்தல்லவா அவர் தலை சரிந்தார்? வீரன் பெயர் சொல்லி அல்லவா விதையாய் வீழ்ந்தார்?

உயிரை ஆயுதமாய் எடுத்து விடுதலைப் போருக்கு தன்னைக் கொடையாய்க் கொடுக்க, ஒரு படை இருக்கின்றதே! காற்றுக் கூடப் புக முடியா இடங்களில் இவர் புகுவாரே! சாவைத் தெரிந்து வைத்து போரை எதிர்கொண்ட சந்ததிகள் இவர்கள். இந்தத்துணிவு எங்கிருந்து வந்தது? எப்படி இவர்களிடை அது விதைபட்டது. தலைவனை நம்பி அல்லவா தம்மைக் கொடுத்தனர். அண்ணனை நம்பி அல்லவா அகிலம் வென்றனர்? பெண்ணியம் என்று உலகெலாம் பேசுகின்றதே! பேசிக்கொண்டிருப்போர் பலர்! செயலாற்றிக்கொண்டிருப்போர் யார்? ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக வாழ வழிகாட்டியவர் யார்? யார் அவர்? ‘நாமிருக்கும் நாடு நமது’ என்று நமக்கு அறிவித்தவர்.

அது நமக்கே உரிமையாம் என்றும் தெரிவித்தவர். புறநானூற்றுக்கு புதிய அத்தியாயம் வரைந்தவர். போர் வரலாற்றுக்கு புதிய பக்கம் திறந்தவர். மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழன் வழிகாட்டியாக வாழ்பவர். எங்கள் விழியாகி வீரம் விளைநிலமாகி நிற்பவர். சொல்லிற்கும் அப்பாற்பட்டவர். சோதிப் பிழம்பானவர். இதோ வீழ்ந்தார் தமிழர். இனி எழார் என்று எதிரி எக்காளத் தொனியுடன் கூவ ‘இதோ எழுந்தார் தமிழர். இனி வீழார்’ என்று சங்கநாதம் முழங்கிய தமிழின் தலைமகன் இவர். தம்மைக் கொடையாய்க் கொடுத்தவரின் தலைவன். தம்மை விறகாய் எரித்தவரின் வீரன். வீரா, எம் தேசத் தலைவா, முத்தமிழ் குமரா, நீ வாழ்க, நின் படை வாழ்க. கொடி வாழ்க. குலம் வாழ்க. இனம் வாழ்க. நலமும் பல்லாண்டு வாழ்க. அண்ணா, நீ வாழ்ந்தால் நாங்கள் வாழ்வோம். தலைவா, தாங்கள் வாழ்ந்தால் தமிழ் வாழும்.

ஆசிரியர்,

எழுத்தாளர், விமர்சகர்.

பிரித்தானியா.

இரவி

அருணாச்சலம்

கிழக்கு வெளுக்கிறது! தமிழுக்கு பொற்காலம் பூக்கிறது!!

Posted on

அன்றைய தமிழன் காதலையும் வீரத்தையுமே தன் வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்தவன் என்பது வரலாறு. காலப்போக்கில் அவன் ஊட்டி வளர்த்த வீர வரலாறு தேய்பிறையாகி, அவை காலப்போக்கில் வெறும் இலக்கியச் செய்திகளாக மட்டுமே இலக்கியங்களில் காணும் நிலை உருவானது.

அவன் வீரமும் விவேகமும் நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருந்ததே தவிர, மாய்ந்துவிடவில்லை – மறைந்துவிடவில்லை என்பது ஈழத்தமிழர்களால் செயல் பூர்வமாக உணர்த்தப்பட்டு வருவது வெளிப்படையான பேருண்மை. அதற்கு ஊற்றுக்கண்ணாக விளங்கிக்கொண்டிருக்கும் உன்னதத் தமிழன் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவ்வீரத் திருமகன் பொன்விழா அகவையை அடைந்து வீரப்பிழம்பாக, விவேகப் பேரொளியாகத் திகழ்ந்து வீரவரலாறு படைத்து வருவதை – அவர் மூலம் வீரத் தமிழனின் பழம்பெரும் வரலாறு மீள்வதைக்கண்டு உலகத் தமிழ் இனமே உளமார வாழ்த்துகிறது. தமிழ் உள்ளங்கள் மீண்டும் புத்தெழுச்சி கொள்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.

இதன் வாயிலாக தமிழ்மொழி, கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் ஒரு புதிய ஒளி – புத்தெழுச்சி உருவாவதைக் கண்டுணர முடிகிறது. அதிலும் குறிப்பாக, தமிழனின் முகமும் முகவரியுமாக அமைந்துள்ள ‘தமிழ்வளர்ச்சி’ என்றும் காணா அளவில் பேரெழுச்சி பெற்று வருகிறது என்பது மறுக்கமுடியாத பேருண்மை. தமிழின் எதிர்காலம்பற்றி மனத்திரையில் நாளும் உருக்கொண்டெழும் தமிழ் எழுச்சிக்கான உந்துதலை, உத்வேகத்தை அப் பெருமகனிடமிருந்து பெறுகிறோம் எனக் கூறுவதில் தவறேதும் இருக்க முடியாது. இன்றைய தமிழ் பெறவேண்டிய எழுச்சியை- மறுமலர்ச்சியை உணர்ந்து தெளிய முதற்கண் வரலாற்றுத் தடயத்தை – பதிவை அறிந்துணரவேண்டும்.

சங்க காலத்துக்கு முந்தைய தமிழகம் சமயச் சார்பற்ற – அறிவு பூர்வமாக வாழ்ந்த சமுதாயமாக இருந்தது. அவனது அறிவியல் அறிவும் உணர்வும் உச்சமாக இருந்தது. அதற்கேற்ப அவன் தமிழை அறிவியல் தமிழாக ஆற்றலோடு வளர்த்திருந்தான் என்பதை அன்றைய இலக்கியங்களுள் பொதியப்பட்டுள்ள அறிவியல் நுட்பச் செய்திகளே இன்றும் பறைசாற்றிக்கொண்டுள்ளன. கால மாறுதலுக்கேற்ப சங்கத் தமிழ், சமுதாயத் தமிழாக மலர்ந்தது. பின், வைதீக சமயம், சமணம், பௌத்தம், அதன்பின் வெளிநாட்டிலிருந்து கிருத்துவம், இஸ்லாமியம் என வந்தபோது சமயத் தமிழாக வடிவெடுத்து வளர்ந்து வளம் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சி வீச்சோடு நிலைபெற்றபோது, அவர்கள் மூலம் மேனாட்டிலிருந்து இறக்குமதியான புதினம், சிறுகதை, திறனாய்வு, ஓரங்க நாடகம்போன்ற இலக்கிய வகைகளை உள்ளடக்கிய புதுமைத் தமிழாக வடிவெடுத்தது.

காலத்தின் போக்கையும் தேவையையும் அனுபவித்துத் தன் வளர்ச்சிப் பாதையை உருவாக்கிக் கொள்ளும் மொழியே வாழும் வெற்றியைப் பெற முடியும். மேலும் நடைமுறைச் சிந்தனைக்கேற்ப, அறிவியல் தமிழாக வளர்ந்து வளம்பெற வேண்டிய கட்டாயநிலை தமிழுக்கு ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இச் சூழலை உணரமுடியாத தமிழர்கள், வெறும் வாய் வீச்சில் சிக்கித் தமிழ் சீரழிந்துவிடுமோ என எண்ணி மறுகும் என் போன்றோர் தமிழின் ஆற்றலை முழுவீச்சில் வெளிப்படுத்தி, ‘தமிழ் ஓர் உன்னதமான அறிவியல் மொழி’ என்பதை எண்பிக்கும் முயற்சிக்கு, எல்லா வகையிலும் ஆக்கம் தேடும் வகையில் ‘பொங்கு தமிழ்’ மாநாடு நடத்தி ஆக்கச் சிந்தனை மூலம் இன்றைய சூழலில் தமிழ் வளர்ச்சியை விண்ணுக்கு உயர்த்த முயற்சி மேற்கொண்ட அச்செயல் வீரனை தமிழ் இனத்துக்கு மட்டுமல்ல – தமிழின் விடிவெள்ளி என்றே கூறவேண்டும்.

வெறும் உணர்ச்சிக்கு இரை போடாது, அறிவார்ந்த செயல் திட்டங்கள் மூலம் தமிழுக்குப் பொற்காலம் அமைக்க முயலும் – முனைப்புக் காட்டும் முயற்சி என் போன்றோர்க்கு பேருவகை ஊட்டுவதாயுள்ளது. தமிழ் ஓர் அறிவியல் மொழி – அறிவியலைச் சொல்லுவதற் கென்றே உருவாக்கப்பட்ட மொழி என்பதை நிறுவும் வகையில் இதுவரை சுமார் ஆறரை இலட்சம் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவக்கலைச் சொற்களை உருவாக்கி 6,500 பக்கங்களில் எட்டுத் தொகுதிகளை எழுதி வெளியிட்டுள்ளேன் என்றால், அது என் திறமையோ அல்லது என்னோடு இணைந்து உழைக்கும் என் நண்பர்களின் திறமையோ அன்று. இதெல்லாம் தமிழின் ஆற்றலையே வெளிப்படுத்துகிறது.

தமிழால் முடிகிறது. அதனால் அது என்னால் முடிகிறது என்பதே முழு உண்மை. தமிழ் வளர, வாழ, அதன் மூலம் தமிழினம் உயர எல்லா வகையிலும் மாபெரும் உந்துசக்தியாக, கிழக்கு வெளுக்க உதயமாகும் கதிரோனாக விளங்கும் சீர்மிகு செம்மலின் பொன்விழா ஆண்டை உலகத் தமிழர்களெல்லாம் பூரிப்போடு கொண்டாடி மகிழும் இம்மகிழ்ச்சி வெள்ளத்தில் என் உள்ளமும் நீந்தி மகிழ்வெய்துகிறது. இந்த இனிய சூழலில் தமிழுக்கு எல்லா வகையிலும் உந்து சக்தியாய் அமையவல்ல ‘செம்மொழி’ அங்கீகார முத்திரை படைத்திருப்பது தமிழன்னை ‘பொன்விழா செல்வர்’க்கு உவந்தளித்த பரிசு என்றே கருதி மகிழ்கிறேன்.

வாழ்க பல்லாண்டு! பல்லாண்டு!! பல்லாயிரத்தாண்டு!!!

முன்னாள் இதழாசிரியர்

யுனெஸ்கோ கூரியர்

(தமிழ்), தமிழ் ஆய்வாளர்,

தமிழகம்.

மணவை முஸ்தபா