தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும் – பாகம் 08 #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #Ltte #Prabhakaran #Tamil #Eelam
“தமிழீழத் தேசியத் தலைவரும் – தமிழீழ விடுதலைப் போராட்டமும்!.”
(சிறப்பு வரலாற்றுத் தொடர் பாகம் 08)
தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடும் – ராஜீவ் காந்தியின் திட்டமும்
கடந்த பதிவில் தலைவர் பிரபாகரன் அவர்களை தமிழகத்தில் வைத்து கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதையும் அதனை தலைவர் பிரபாகரன் அவர்கள் எவ்வாறு கையாண்டார் என்பதையும் பார்த்திருந்தோம் இன்றைய பதிவில் இந்தியாவின் நேரடி தலையீடு பற்றியும் ராஜீவ் காந்தியின் நரி திட்டம் பற்றியும் விரிவாக பார்ப்போம்
1987ஆம் ஆண்டு ஆடி 24ஆம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரன் அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து ‘இந்தியாவின் பிரதமர் ராஜிவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக” கூறித் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து செல்ல முயன்றார்கள், அவசரப்படுத்தினார்கள்.
இந்நிலையில் தமிழீழ மக்களுக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் “இன்று தமிழ் மக்கள் தங்கள் இலட்சியத்தை வென்று எடுக்கும் ஒரு தலைமையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுகின்றேன். நீங்கள் எனக்கு அளித்துவரும் பொறுப்புக்களை நான் நேர்மையாகவும் உண்மையாகவும் உறுதியுடனும் செய்வேன் என நம்புகின்றேன். தற்காலத்தில் காணப்படும் இடைக்கால தீர்வுகள் எமது பிரச்சினையின் தீர்வாக அமையாது.
எனவே தமிழ் மக்களின் நிரந்தரமான, நிம்மதியான, சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நிரந்தர தீர்வுக்காகவே நான் பாடுபடுகின்றேன். இத் தீர்வு தமிழீழம் என்றே நான் நம்புகிறேன். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் விசேட அழைப்பின் பேரிலேயே நான் தமிழீழத்தைவிட்டு உத்தியோக பூர்வமாக இந்தியா செல்கின்றேன்” என்று கூறிவிட்டு இந்திய அரசு அனுப்பி இருந்த இராணுவ உலங்கு வானூர்தியில் டில்லிக்கு புறப்பட்டார். போகும் வழியில் தமிழகத்தின் முதலமைச்சர் எம்.ஜி. ஆரை சந்தித்துப் பேசினார். அப்போதும் எதற்காக இந்த அவசர அழைப்பு என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. டில்லி சென்ற தலைவர் பிரபாகரன் அவர்களையும் அவரது ஆலோசகர்களையும் “அசோகா விடுதியில்” தங்கவைத்தனர்.
இந்தியாவின் சிறீலங்காவுக்கான தூதுவர் தீட்சித், இந்திய வெளிநாட்டுத்துறைச் செயலாளர் மேனன் உட்படப் பல அதிகாரிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்து இந்தியாவும் சிறீலங்காவும் செய்து கொள்ளவிருக்கும் “ஒப்பந்தம்” பற்றி முதன்முதலாகத் தெரிவித்தார்கள். இதைக் கேட்டதும் தலைவர் பிரபாகரன் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார். ஒப்பந்தத்தின் பிரதிகளை அவரிடம் கொடுத்துவிட்டு உடனே திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தத்தினை ஏற்கமுடியாது என்று தலைவர் பிரபாகரன் அவர்கள் மறுத்தார். தலைவர் பிரபாகரன் அவர்களை சம்மதிக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்கள் உறுதியாக ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார். இந்தியப் பிரதமர் சந்திக்க விரும்புவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள், பிரதமரும் தலைவர் பிரபாகரன் அவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை. இடையில் நான்கு நாட்கள் பறந்தோடின.
தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்ததும் தமிழகத்தில் இருந்த இந்தியாவின் அடிவருடிகளான மற்றைய தமிழ் குழுக்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். சொல்லி வைத்தபடியே ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்கள். தலைவர் பிரபாகரன் அவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி அறிவித்தார். யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆடி 29ஆம் நாள் கொழும்பு செல்லப் போவதாகவும் அறிக்கை விட்டார்.
இதற்குப் பின்னர் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியப் பிரதமர் சந்தித்தார். அப்போது தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்திலுள்ள பலகுறைகளைச் சுட்டிக் காட்டினார். ஆனால் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகப் பொய்யான செய்திகள் இந்திய அதிகாரிகளால் தொடர்பு சாதனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. உடனே தலைவர் பிரபாகரன் அவர்கள் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த அசோகா விடுதியை சுற்றி ‘கறுப்புப் பூனைகள்” என்ற இந்திய கொமாண்டோப் படைப்பிரிவினர் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
அடுத்த தொடரில் டெல்லியில் என்ன நடந்தது என்பதையும் தலைவர் பிரபாகரன் அவர்களின் அசராத மன உறுதி பற்றியும் வெளிவராத உண்மைகளை வரிவாக பார்ப்போம்….
தலைவரின் சீற்றம் ஆரம்பம்…
வரலாற்று பதிவில் இருந்து ஈழம் புகழ் மாறன்